லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில், ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கும் படம் ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’
இந்த படத்தை கேசவ் தெபுர் இயக்கியுள்ள இந்த படம் வரும் நவம்பர் 3-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் அறிமுக விழா 30.10.2023 அன்று சென்னையில் நடந்தது.
படத்தின் இயக்குநர் கேசவ் தபுர் பேசியபோது, ‘‘இந்த படம் நீங்கள் நினைப்பது போல் கிளுகிளுப்பாக இருக்காது, சந்தோஷமான கிளுகிளுப்பாக இருக்கும்.
நான் இதுவரை வந்த படங்களைப் பார்த்து தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். எத்தனையோ படங்களில் அனுமதித்த காட்சிகளை எல்லாம் எங்களுக்கு மட்டும் சென்சாரில் அனுமதிக்க முடியாது என்றார்கள்.
சென்சார் விதிகள் எல்லாம் 1952 -ல் உள்ளது அப்படியே இன்றும் உள்ளன. ஆனால் திரைப்படங்களும் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் எவ்வளவோ மாறிவிட்டன. ஆனால் அதை மாற்றாமல் அப்படியே வைத்து இருக்கிறார்கள். 5 ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்சார் விதிகளை மாற்ற வேண்டும்.
தெருக்கூத்துகளில், நாடகங்களில் இல்லாத இரட்டை அர்த்த வசனங்களா? ஆனால் திரைப்படத்தில் இருந்தால் பெரிது படுத்துகிறார்கள். அதில் இல்லாததையா நாங்கள் காட்டுகிறோம்? இன்று சினிமா, வெப் சீரிஸ் எல்லாம் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
அடுத்ததாக ரிவைஸிங் கமிட்டிக்கு சென்றும் போராடினோம். அதையெல்லாம் கடந்துதான் இந்த படம் திரைக்கு வருகிறது.
படத்தில் நாங்கள் கருத்து சொல்லவில்லை. அடல்ட் காமெடி படம்தான் எடுத்துள்ளோம்” என்றார்.
நிகழ்வில் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி பேசியபோது, ‘‘சமீபமாக மக்கள் கத்தி, வெட்டுக்குத்து, ரத்தம் என்று வரும் படங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு ஜாலியாக இருக்கும் படியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும் படியாக இருக்கும்” என்றார்.
விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன், விநியோகஸ்தர்கள் ரமேஷ் சுப்பிரமணியன், அஞ்சலி முருகன், படத்தின் இசையமைப்பாளர் ஜி கே வி, எழுத்தாளர் பொன். முருகன், கலை இயக்குநர் ராமச்சந்திரன், சண்டைப் பயிற்சி இயக்குநர் ராஜாசாமி, பாடலாசிரியர் சிவப்பிரகாசம், படத்தில் நடித்திருக்கும் மாரி வினோத், வில்லன் விஜய் பிரசாத், நடிகைகள் காயத்ரி, சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா, படக் குழுவினருக்கு நெருக்கமான நண்பர்கள் வேலூர் வெங்கடேசன், அண்ணாமலை, சின்னையா, தாமு, காளிராஜன், காத்து கருப்பு கலை, தயாரிப்பாளர் சுப்பிரமணியன் மலைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.