சென்னையில் ஏ.ஐ.எம்.எஸ் அழகியல் பயிற்சி மையத்தை (A.I.M.S Aesthetic Training institute) சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பயிற்சி மைய இயக்குநர் வசந்த் ராஜகுரு உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், நடிகைகள் அதுல்யாரவி, வித்யூராமன், தர்ஷாகுப்தா, தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், ”அழகியல் பயிற்சி மையம் தொடங்குவது நல்ல முயற்சி. தோல் பராமரிப்பு தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. நான் கல்லூரியில் படித்த காலங்களில் ஓரிரு பெண்கள் மட்டுமே லிப்ஸ்டிக் போட்டு வருவார்கள். இப்போது அனைவரும் மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அது அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை கொடுக்கும். தோல்பராமரிப்பை கற்றுக்கொடுக்கும் இந்த பயிற்சி மையம் நல்ல முயற்சி” என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பயிற்சி மைய இயக்குநர் வசந்த் ராஜகுரு, ஏ.ஐ.எம்.எஸ் பயிற்சி மையத்தில் தோல் பராமரிப்பு, முகப்பரு சிகிச்சைகள், தழும்பு நீக்கம், தேவையற்ற ரோமங்களை நீக்குதல், உடல் வடிவமைப்பு, அழகியல் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவை சர்வதேச தரத்தில் வழங்கப்பட உள்ளது. தோல் பராமரிப்பிற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும், சர்வதேச அளவில் நடைமுறை சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சைக்கான பயிற்சியை வழங்குவதால் இது பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கு கூடுதல் சிறப்பைக் கொடுக்கும்” என்றார்.
ஏ.ஐ.எம்.எஸ் அழகியல் பயிற்சி மையம் சென்னை சேமியர்ஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அமைந்துள்ளது.